இனி Single Window system முறையில் கட்டடம், மனைக்கு ஒப்புதல்!’ – இதனால் யாருக்கு என்ன பயன்?

ஒற்றைச்சாளர முறை இந்த ஆண்டில் செயல்படுத்தப்படும் என்றும் சமீபத்தில் நடந்த தமிழக பட்ஜெட் கூட்டத்தில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வேண்டும் என்றால், பல்வேறு அனுமதிகளைப் பெற அரசு அலுவலகங்களில் ஏறி இறங்கி `கவனிக்க வேண்டியதைக் கவனித்தால்’ மட்டுமே அனுமதி கிடைக்கும் என்ற நிலை இருக்கிறது. அதே போலத்தான் வீடு கட்டுவதாக இருந்தாலும், வீட்டுமனை வாங்குவதாக இருந்தாலும் பல்வேறு அனுமதிகளை அரசிடம் இருந்து பெற வேண்டும். இந்த இடத்தில் கட்டாயக் கையூட்டு வழங்குவதில் பெரும் சிக்கலை மக்கள் சந்திக்கின்றன. அதுமட்டுமல்லாமல் பல்வேறு அனுமதிகளைப் பெறுவதற்காக பல அரசு அலுவலகங்களுக்கு ஏறி இறங்குவதால் அதிக நேரம் விரையம் ஆகிறது.

இதைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசாங்கம் திட்ட அனுமதி, கட்டடம் கட்டுதல், மனைகள் ஆகியவற்றுக்கு ஒப்புதல் வழங்கும் நடைமுறையைத் துரிதப்படுத்துவதற்காக சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம், நகர் ஊரமைப்பு இயக்ககம், பெருநகர சென்னை மாநகராட்சி, உள்ளூர் திட்டக் குழுமங்கள் மற்றும் பிற உள்ளாட்சி அமைப்புகளால் ஒருங்கிணைந்த `இணையதள வழி ஒற்றைச் சாளரமுறை’ (Single Window System) வசதியைத் தொடங்கி இருக்கிறது.

இந்த ஒற்றைச்சாளர முறை இந்த ஆண்டில் செயல்படுத்தப்படும் என்றும், சமீபத்தில் நடந்த பட்ஜெட் கூட்டத்தில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மேலும், பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்துக்காக (நகர்ப்புறம்) ரூ.3,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு ரூ.8,737.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் பழுதடைந்த பழைய குடியிருப்புப் பகுதிகள் மறுமேம்பாடு மேற்கொள்ளப்படும். இதற்காக, அரசு ஒரு மறுமேம்பாட்டுக் கொள்கையை இந்த ஆண்டு வெளியிடும். இதுவரை 60 திட்டங்கள் இதற்காக அடையாளம் காணப்பட்டு, தொடக்கப் பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இந்தத் திட்டங்களில் அதிகபட்ச தளப்பரப்பை அடைவதற்கு, தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்’ என்றும் தமிழக அரசு சார்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கட்டுமானத் துறை சார்ந்த நிபுணர் ஷியாம் சுந்தரிடம் பேசினோம். “தமிழக அரசு வெளியிட்டு இருக்கும் இணையதள வழி ஒற்றைச் சாளரமுறை’ (Single Window System) அறிவிப்பானது புதியது கிடையாது. காலம் காலமாக சொல்லப்படும் அறிவிப்புதான். ஒவ்வோர் ஆண்டும் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து வெளியிட்டுக்கொண்டு மட்டுமே இருக்காமல், இந்த அறிவிப்பைத் தற்போதைய தமிழக அரசு உடனடியாக நடைமுறைப்படுத்தினால், அது மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இத்துறை சார்ந்த நடவடிக்கைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

தற்போதைய நிலையில், சிறிய வீடு அல்லது தனி வீடு கட்டுபவர்களுக்கு பிரச்னைகள் பெரிய அளவில் இல்லை. ஆனால், கமர்ஷியல் கட்டடங்கள் மற்றும் பெரிய அப்பார்ட்மென்ட்களைக் கட்டுபவர்களுக்கு அரசு அனுமதிகளைப் பெறுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது.
தற்போதைய நிலையில், அரசு அனுமதியைப் பெறுவதற்கு முன்பாகக் கட்டடத் தூண்கள், தளம் அமைப்பது போன்ற விஷயங்களுக்காக வாங்கப்படும் `ஸ்டக்ச்சரல் கன்சல்டன்ட்’ சான்றிதழ், வழக்கறிஞர் கருத்து, மண் பரிசோதனை எனப் பல அனுமதிகளைப் பெற்ற பின்னரே அரசு அலுவலகத்தை நாட முடியும். இப்படியான சூழ்நிலையில், சி.எம்.டி.ஏ மற்றும் வருவாய்த்துறை எனப் பல அரசு அலுவலகங்களை ஏறி இறங்க வேண்டிய நிலை இருக்கிறது. ஒற்றைச் சாளரமுறையின் மூலம் அரசின் அனுமதி சார்ந்த அனைத்தும், ஒரே குடையின்கீழ் வந்துவிட்டால் கால்கடுக்க காத்திருக்க வேண்டிய நிலை இனி இருக்காது.

இன்றைய நிலையில், இ.சி மட்டும்தான் உடனுக்குடன் டிஜிட்டல் முறையில் அப்டேட் ஆகிறது. மற்ற ஆவணங்களில் திருத்தம் செய்யப்படும் எதுவும் உடனுக்குடன் அப்டேட் ஆவதில்லை. மேலும், பல ஆவணங்கள் டிஜிட்டலில் அப்டேட் செய்யப்படாமல் இருக்கின்றன. இனி எல்லாமே டிஜிட்டல்மயம் என்று ஆனபிறகு, அதை நோக்கி அனைத்துச் செயல்பாடுகளையும் அரசு நகர்த்திக் கொண்டிருக்கும்போது கட்டுமானத் துறை மற்றும் ரியல் எஸ்டேட் துறை சார்ந்த சொத்து ஆவணங்களும் டிஜிட்டல் முறையில் அப்டேட் செய்யப்பட வேண்டும்.

ஒருவர் தனது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை மற்றொருவரின் வங்கிக் கணக்குக்கு அனுப்பும்போது, ஒரே நேரத்தில் வரவு மற்றும் பிடித்தம் ஆகிய செயல்பாடுகள் நடப்பது போல, ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு சொத்து கைமாறும் போது மின்சாரம், கார்ப்பரேஷன் உள்ளிட்ட அந்த சொத்து சார்ந்த அனைத்து ஆவணங்களிலும் பெயர் மாற்றமடைய வேண்டும். அதே பட்டா, சிட்டா உள்ளிட்ட ஆவணங்களில் பெயர் மாற்றம் அடைய வேண்டும். அதற்கு அனைத்து அரசு அலுவலகங்களும் முழுமையாக டிஜிட்டல்மயம் ஆக வேண்டும்” என்றார் தெளிவாக.

அரசின் இந்த நடவடிக்கை நடைமுறைக்கு வந்தபிறகு கட்டடம் கட்டுவது என்பது அனைவருக்கும் ஓர் இனிய அனுபவமாக அமையட்டும்!

Share This With Your friends:
Scroll to Top